''கொலை செய்தது இவர்கள் தான்.." - டேன் பிரியசாத்தை சுட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகள்

டேன் பிரியசாத் கொலை தொடர்பாக நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அடையாள அணிவகுப்பு இன்றையதினம் வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கொலையை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள், சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான வழக்கறிஞர், வழக்கு தவறான திசையில் செல்வதாக தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்களுக்கு டேன் பிரியசாத்தின் கொலைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உண்மையான குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அடையாள அணிவகுப்பில் முன்னிலையான சாட்சிகளில் இருவர், இரண்டாவது சந்தேக நபரின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபருக்கு நன்கு தெரிந்த உறவினர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவது சட்டப்பூர்வமானது அல்ல என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.